Podaa Podi Movie Review - Maalaimalar


Published In MAALAIMALAR Daily Evening News Paper Dated 19-November-2012

லண்டனில் வாழும் நாயகனாக சிம்பு. இவர், காதலிக்கலாமா? வேண்டமா? என்ற குழப்பத்துடன் அலைகிறார். இறுதியாக, காதலிக்கலாம் என்ற முடிவு செய்து நாயகியான வரலட்சுமியை சந்திக்கிறார். 

வரலட்சுமி லண்டனில் ஒரு டான்ஸ் கிளாஸில் சேர்ந்து டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். லண்டனில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.

இதற்கிடையே, சிம்புவுக்கும் இவருக்கும் காதல் மலர்கிறது. சிம்புவுக்கு தன் காதலி நடனப் பள்ளிக்கு செல்வது, அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது, அவள் நண்பர்களுடன் சகஜமாக கட்டி அணைப்பது, முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இதனால், இவர்களது காதலில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. இதனால் இருவரும் பிரிய முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள ஆழமான காதலால் பிரிய முடியாமல் தவிக்கிறார்கள்.

சிம்புவின் பிறந்த நாளன்று தனது வீட்டில் யாருமில்லை எனக் கூறி நாயகியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்போது, சிம்புவுக்கு தெரியாமலேயே அவரது பிறந்தநாளை கொண்டாட நினைக்கும் அவரது சித்தப்பா கணேஷூம், அவரது மனைவியும் இவர்களை பார்த்துவிடுகிறார்கள். உடனே, இருவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் இதற்கு சிம்பு சில கண்டிஷன்கள் போடுகிறார். அதன்படி, டான்ஸ் கிளாஸ் போகக்கூடாது. மற்றவர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்று வரலட்சுமிக்கு கட்டளையிடுகிறார். இது தனக்கு ஒத்துவராது என்று வரலட்சுமி கோபித்துக் கொண்டு சென்றுவிடுகிறார். பின்பு, தான் ஒருநாள் உன் பேச்சை கேட்கவேண்டும், மற்றொரு நாள் என் பேச்சை நீ கேட்கவேண்டும் என்ற நிபந்தனையோடு வரலட்சுமி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதற்கு சிம்புவும் சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. 

வரலட்சுமியை நடனப் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சிம்புவுக்கு கணேஷ் யோசனை கூறுகிறார். அதன்படி, சிம்புவும் வரலட்சுமியும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப்பற்றி ஒன்றும் அறியாத வரலட்சுமி, ஒருகட்டத்தில் இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்கிறார். இதுகுறித்து சிம்புவுடன் சண்டைபோட, அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களின் குழந்தை விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறது. இதனால் விரக்தியடைந்த வரலட்சுமி சிம்புவை பிரிந்து செல்கிறார். 

இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? வரலட்சுமியின் நடனக் கலைஞர் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை. இப்படத்தில் சிம்பு, இளமை துடிப்புடன், மிடுக்கான இளைஞனாக வலம் வருகிறார். தனது முந்தைய படங்களில் உள்ளதுபோல், பஞ்ச் வசனங்களும், பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மென்மையான நடிப்பில், ஆக்ரோஷமான வசனங்களை குடும்ப பாணியில் பேசியிருப்பது அழகு. வரலட்சுமி தனது முதல் படம் என்பதே தெரியாமல் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லண்டன் வாழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது மிகச்சரியானது. 

முற்பாதியில் கதை எங்கு செல்கிறது என்பது சற்று சிந்திக்க வைத்தாலும், பிற்பாதியில் கதையை விறுவிறுப்பபாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். முழுக்க முழுக்க இளைஞர்களுக்காகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். தரண் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. ‘லவ் பண்லாமா? வேணமா?’, ‘ஐ ஆம் ஏ குத்து டான்ஸர்’ பாடல்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று ஆட வைக்கின்றன. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் டன்கன் டெல்போர்ட் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். படத்தின் இளமையான தோற்றத்துக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்றால் அது மிகையல்ல. நாகரீகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்களின் பாசமும், பண்பாடும் என்றுமே மாறாது என்பதை சொல்ல முன்வந்த இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். மொத்தத்தில் ‘போடா போடி’ இளமை துள்ளல்


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com